Tuesday, October 15, 2013

Jeevathma and Paramathma Relation - By Naradha

சிறு ப்ராயத்தில் நமது பெற்றோர்கள் நமக்கு பல நீதிக் கதைகளைச் சொல்லி நம்மை நல் வழிப்படுத்தினர். நாமும் நமது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நன்நெறி போதிக்க இதிஹாஸத்திலிருந்து பல கதைகளைச் சொல்லி நீதி, தர்மம், நல்வழி என்ற நல்ல செய்திகளை சொல்கின்றோம். கதைகள் மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி மனதில் பதியவைப்பது என்பது தொன்று தொட்டு வரும் வழிமுறையாகும். நாரத மகரிஷி ப்ராசீனபர்ஹீ என்ற அரசனுக்கு ஆத்மா, ஜீவன், ப்ரம்மம், ஜன்மம், மரணம், ஸமாதி நிலை, முக்தி என்ற பல அறிய விஷயங்களை ஒரு கதை மூலம் சொல்லி, இவைகளுக்குள் உள்ள சேர்க்கைகள் என்ன என்று விளக்குகிறார்.
வெளி நாட்டவர் நமது புத்தகங்களை அலசி அதிலிருந்து பல அறிய செய்திகளை, ஆங்கிலத்திலும், எனைய பிற மொழிகளிலும் அச்சிட, அந்தப் புத்தகங்களை நாம் வாங்கிப் படித்து, நமது சமூகத்தில் நம்மை மதிக்க வேண்டி அந்தப் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டி நம்மையே நாம் உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறோம். என்னே அவலம். 
கீழ் வரும் பாகத்தில் அந்தக் கதையையும், அந்தக் கதையின் நாயகர்கள் நாயகிகளை சிவப்பு வண்ணத்தில் கவனயீர்ப்பு செய்துள்ளேன். சிவப்பு வண்ணத்தில் இருப்பதைச் சேர்த்தால், பிறப்பு, இறப்பு, ஜீவாத்மா, பரமாத்மா உயிர்தத்துவம் எல்லாம் விளங்கும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் 4-28-65 ஸ்லோகம் வழியாக நாம் அறியலாம்.
பர்ஹிஷ்மன்னேத தத்யாத்மம் பாரோலக்ஷ்யேண ப்ரத்ர்ஸிதம்
யத்பரோக்ஷ ப்ரியோ தேவோ பகவான் விஸ்வபாவன:
புரஞ்ஜனன் (ஜீவாத்மா) என்ற ஒரு அரசன் அவனது நண்பன் அவிஜ்ஞதனுடன் (பரமாத்மா) அவர்கள் இனிதே வாழ நல்ல அரண்மனையைத் தேடி அலைந்தனர். பல பட்டணங்களைப் பார்த்து அவைகள் பிடிக்காமல் இமயமலை நோக்கிச் சென்றனர். அங்கு ஒன்பது வாயிற்படிகள் உள்ள ஒரு பட்டினத்தைக் (மனித சரீரம்) கண்டனர். அங்கிருந்து ஒர் அழகிய பெண் (புத்தி) வெளி வந்தாள். அவளைப் பின் பற்றி பத்து வேலக்காரர்கள் (ஐந்து ஞனேந்த்ரியம் + ஐந்து கர்மேந்திரியம்) வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான வேலைக்காரிகள் (இந்திரியங்களின் வ்ருத்திகள்) இருந்தனர். அப்பட்டணத்தை ஒர் ஐந்து தலை நாகம் (ஐந்து ப்ராணன்) காவல் புரிந்துவந்தது. புரஞ்ஜனன் (ஜீவாத்மா) என்ற இந்த அரசன் அவளை (புத்தி) மணந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அப்பட்டணத்தில் சுகவாழ்வு வாழ்ந்து வந்தனர்.
அப்பட்டணத்திற்கு மேலே ஏழு வாசற்படிகளும், கீழே இரண்டு வாசற்படிகளும் இருந்தன. தன் மனைவி கோருபவற்றை நிறைவேற்றி வைப்பதுடன், தன் தோழனை (பரமாத்மா) மறந்து வாழ்ந்து வந்தான். தேவர்கள், பித்ருக்கள் முதலியவர்களை, பல பொருள்களை வேண்டி, யாகம் முதலியவற்றால் திருப்தி செய்வித்தான்.
இவ்வாறு இருக்கையில், ஸ்திரீகளிடத்தில் அன்பு வைத்தவர்களுக்கு அப்ரியமான காலம் ஏற்பட்டது. சண்டவேகன் என்ற அரசன் அப்பட்டணத்தை பலசாலியான 360 கந்தவர்களுடனும் (பகலும்), அதே எண்ணிகையுள்ள கந்தர்வ ஸ்த்ரீகளுடன் (இரவு) முற்றுகையிட்டு அப்பட்டணத்தை அழிக்க ஆரம்பித்தான். ப்ரஜாகரன் (ப்ராணவாயு) என்ற அரசனும் எதிர்த்து போரிட்டான்.
காலனின் பெண் துர்பகை (ஜரை – கிழ்த்தன்மை அடைதல்) என்பவள் எங்கு தேடியும் தனக்கு மணாளன் கிடைக்காத்தால், யவனர்களின் தலைவனான பயம் (ம்ருத்யு), உன்னை ஒருவரும் தெரிந்து விவாஹம் செய்து கொள்ளமாட்டார்கள். மனிதர்கள் உன்னை அறியமாட்டார்கள். ஆகையால் அவர்களுக்குள் புகுந்து அனுபவி. அதற்கு உதவியாக எனது சைன்யாமான யவனர்களை (சரீர வ்யாதியும் மனோ வ்யாதி) அழைத்துச் செல். எனது சகோதரன் ப்ரஜாவரனை (ஜ்வரம்) உடன் அழைத்துச் செல். எங்கள் இருவருக்கும் நீ சகோதரியாவாய். நாம் மூவரும் சைன்யத்துடன் சென்று அப்பட்டணத்தை முற்றுகையிடலாம். அங்குள்ள மனிதர்களை அனுபவி என்றான். துர்பகை ப்ரஜ்வரன், யவனர்கள், கந்தர்வர்கள், கந்தர்வ ஸ்த்ரீகள் என்ற பலரால் பீடிக்கப்பட்டு அந்த பட்டணம் தீயிட்டு அழிக்கப்பட்டது. (ஜரை வந்து, சரீர வ்யாதியும், மனோ வ்யாதியும் வந்து, ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டு, ப்ராணவாயு நின்று, ம்ருத்யவை தழுவினான்) புரஞ்சனன் அப்பட்டணத்தை (உடலை) விட்டுவிட முயன்றான். ஓடினான்.
அப்பொழுது யவனர்கள் அவனை ம்ருகத்தை இழுத்து வருவது போல் இழுத்து வந்து யவர்னகளின் தலைவனான பயத்திடம் ஒப்படைத்தனர். அப்பட்டணம் முழுமையாக எறிந்தது. உடனிருந்தவரும் மாண்டனர். அப்பட்டணத்தைக் காத்து வந்த பாம்பும் (ஐந்து ப்ராணன்) வெளியேறியது. அப்பொழுதும் தன்னுடன் வந்த நண்பனை (பரமாத்மா) நினைக்கவில்லை. மாறாக தன் மனைவியை நினைத்து வருந்தினான்.  அதனால் மறு ஜன்மத்தில் விதர்ப்பன் என்ற அரசனுடைய வீட்டில் பெண்ணாகப் பிறந்து மலயத்வஜன் என்ற அரசன் விவாஹம் செய்து கொண்டான். வெகு காலம் இல்லறத்தில் இருந்து பிறகு ஸ்ரீகோபாலனை ஆராதித்து தன் ஆத்மாவைப் பகவானிடத்தில் கலக்கச் செய்தான். சரீரத்தை விட்டுப் பிரிந்த ஆத்மா ப்ரம்மத்தினடத்தில் கலந்ததை வைதர்ப்பி உணரவில்லை. பர்த்தா விதேஹ கைவல்யமடைந்ததை அறிந்து அழுது புலம்பினாள். மேலும் சிதை தயாரித்து பர்த்தாவுடன் சிதையில் ஏறத் தொடங்கினாள்.
அப்பொழுது பழய நண்பன் அங்கு வந்து இந்த ஜன்மம் போன ஜன்மம் இரண்டையும் நினவுபடுத்தி மேலும் கூறலானான். நான் இருவரும் ஒன்று. நமக்குள் பிரிவு ஏற்பட்டு பிரிந்தோம். அற்பஸுகங்களைக் கோரி மறந்துவிட்டாய். உலகெல்லாம் திரிந்து ஒரு பெண்ணினால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்பது வாயில்கள் உள்ள ஒரு பட்டணத்தை அடைந்தாய். அங்கு அப்பெண்ணுடன் விஷய போகங்களில் ஈடுபட்டு என்னை மறந்து, இந் நிலையை அடைந்தாய். நீ விதர்பனின் பெண்ணும் அல்ல. மலையத்வஜனின் மனைவியும் அல்ல. நீ புருஷனுமல்ல, ஸ்த்ரீயும் அல்ல. நானே நீ; நீயே நான் என்றான்.
சரீரம் பொய்யானவை; அது அழியக்கூடியது; ஆத்மா ஒன்றே அழிவற்றது. சரீரம் அழிவதால் ஏற்படும் துக்கத்தைப் போக்க ஸ்ரீபகவானை உபாஸிப்பது ஒன்றே வழி என்று நாரத மகரிஷி ப்ராசீன பர்ஹிஸிற்கு புலப்படுத்த ஒரு கதையினைக் கூறி விளக்குவதே இதன் உட்கருத்து.

No comments:

Post a Comment